Home இலங்கை அரசியல் ராஜபக்சக்களது சொத்துக்கள் குறித்து கேள்வியெழுப்பியுள்ள அநுர

ராஜபக்சக்களது சொத்துக்கள் குறித்து கேள்வியெழுப்பியுள்ள அநுர

0

Courtesy: Sivaa Mayuri

2005ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இறுதி சுவரொட்டியை அச்சிடுவதற்கு கூட பணம் இல்லை என கூறியுள்ள பசில ராஜபக்சவுக்கு எவ்வாறு சொத்துக்களை குவிக்க முடிந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

குருநாகல் தம்புத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பசில் ராஜபக்ச இதுவரையில் அந்த பணத்தை, குறித்த அச்சகத்துக்கு செலுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கலாசாரம்

பணம் இல்லாமல், தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்சர்களுக்கு, உலகம் முழுவதும் வீடுகளை வாங்குவதற்கும், நாடு முழுவதும் காணிகளை கொள்வனவு செய்வதற்கும், கொழும்பில் மாளிகைகளை கட்டுவதற்கும் எவ்வாறு பணம் கிடைத்தது என்று திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்

இதன்படி அரசியல்வாதிகள் மக்களை அடக்கி சொத்துக்களை குவிக்கிறார்கள் என்று கூறிய அவர், இந்த அரசியல் கலாசாரத்திற்கு தேசிய மக்கள் சக்தி முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஜே.வி.பி.யினரோ அல்லது தேசிய மக்கள் சக்தியினரோ, பொதுப் பணத்தை ஒரு சதத்தை கூட தவறாக பயன்படுத்தவில்லை அல்லது அரசியல் மூலம் பணம் அல்லது செல்வத்தை சம்பாதிக்கவில்லை.

அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு

இந்தநிலையில் அதிகாரத்திற்கு வந்தவுடன் அனைத்து சலுகைகளையும் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், அரசியல்வாதிகளை பராமரிக்க பொது பணம் செலவழிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

பொது பணத்தை செலவிட்டு அரசியல்வாதிகளுக்கு வாகன அனுமதி, வீடு, மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்தப்படமாட்டாது.

அத்துடன் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பில் ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version