ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நேற்று (17) மன்னாரில் ஆற்றிய பிரசார உரையானது தேர்தல் விதிமுறையை மீறிய செயற்பாடு என இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை என கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
”மன்னார் நகர சபைக்குத் தமது தேசிய மக்கள் சக்தியினரை மக்கள் தெரிவு செய்தால், அந்த நிர்வாகத்தின் திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நாம் அங்கீகாரம் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்வோம். வேறு தரப்பிடம் நிர்வாகம் போனால் அவர்களின் திட்டங்கள் குறித்து ஒன்றுக்குப் பத்து தடவை பரிசீலித்தே முடிவெடுப்போம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மன்னாரில் உரையாற்றியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
இந்த நிலையில், குறித்த உரை அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் எனவும், இது தொடர்பில் தாம் தேர்தல் ஆணைக்குழுவிடம் (Election Commission of Sri lanka) உத்தியோகபூர்வமாக முறையிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
