இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்டத்திற்கான புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இன்றைய தினம் (08) கூடிய கட்சி உயர்பீட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பதவி வெற்றிடம்
மேலும், கண்டி மாவட்டத்தில் நிலவிய மேற்படியான அமைப்பாளர் பதவியின் வெற்றிடத்தினை பூர்த்தி செய்வதற்காக கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் என்பவர், கடந்த காலங்களில் கண்டி மாவட்டத்திற்காக இ.தொ.கா இளைஞர் அணியின் சிரேஷ்ட அமைப்பாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், அக்கட்சியின் தொழிற்சங்க அமைப்பாளருக்கான நியமனமானது, இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
