Courtesy: Subramaniyam Thevanthan
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின்
திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு
தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின்
குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர்
செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08.04.2025) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாவட்டச் செயலராக வடக்கின் 4
மாவட்டங்களிலும் பணியாற்றிய காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல
திட்டங்களுடன் இணைந்து பணியாற்றியமையை நினைவுகூர்ந்ததுடன் வடக்கு மாகாண
மக்களுக்கான உதவிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்
வடக்கு மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட
ஆளுநர் அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் கடல்நீரை
நன்னீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதையும் குறிப்பிட்டார்.
வடக்கு
மாகாணத்தின் எதிர்காலத் தேவைகளையும் கருத்தில்கொள்ளும்போது குறிப்பாக
முதலீட்டு வலயங்களை வடக்கில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அவற்றுக்கும் குடிநீர்
தேவை என்பதால், அதையும் கருத்திலெடுக்க வேண்டும் என ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தீவகப் பிரதேசங்கள் சுற்றுலா ரீதியாக
அபிவிருத்தி செய்யும்போது அங்கும் குடிநீருக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும்
எனவும் அதனை நிவர்த்திக்கும் வகையில் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாடுகளை
அங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
