நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC) மீது, போதைப்பொருள்
கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள்
குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள், அந்தப் பொறுப்பதிகாரிக்கும் பல்வேறு போதைப்பொருள்
கடத்தல்காரர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் எனக் கூறப்படும் பல
ஒலிப்பதிவுகள் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து
தொடங்கப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய
இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர்
அருண ஜயசேகர, இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும்,
அதன் பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர், இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அத்துடன், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நுரைச்சோலை பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.
