Home இலங்கை பொருளாதாரம் எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் : அமைச்சர் பந்துல விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் : அமைச்சர் பந்துல விடுத்துள்ள எச்சரிக்கை

0

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardana) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஒரு நாடு என்ற வகையில் இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்ததால், இம்முறை அதிபர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்தது. இதன் விளைவாக, 2027 ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்திற்குச் செல்ல முடிந்தது.

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே, நம் நாடு சுவாசிக்கத் தொடங்கியது எனலாம்.

அனைத்து விடயங்களிலும் தன்னிறைவு அடையாத நாடாக நாம் கண்டிப்பாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அரசியல் ரீதியில் யார் தலைவராக இருந்தாலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கொடுக்கல் வாங்கல்களைப் பேண முடியாது.

இத்தகைய பரிவர்த்தனைகள் உலக விதிகளின்படி மட்டுமே நடக்க வேண்டும். நீடிக்கப்பட்ட கடன் வசதி ஒப்பந்தத்தின்படி, 2027 ஆம் ஆண்டு வரை கடன் ஒப்பந்தத்தில் ஈடுபட முடிந்துள்ளது. எனவே நாங்கள் வருடந்தோறும் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்.

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும்.

வரவு செலவுத் திட்ட ஆவணம்

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல், வரவுசெலவுத்திட்டத்தை 2027 வரை தயாரிக்க முடியாது.

சர்வதேச நாணய நிதியம் 2025 வரவு செலவுத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும். உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வரவுசெலவுத் திட்டத்திற்காக வழங்குகிறது.

வரவு செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கும் போது மேலும் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இவ்வாறுதான் தயாரிக்கப்பட வேண்டும்.

யார் ஆட்சி செய்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நிவாரணங்கள் போன்றவற்றுக்கு பணம் கண்டிப்பாகத் தேவை. இந்த முறையைத் தவிர, வரவுசெலவுத் திட்டத்திற்கான பணத்தைப் பெற வேறு வழியில்லை.

கடன் நிவாரணம்

இந்த கடன் நிவாரணம் என்பது கணிப்புகள் மாத்திரமே. இந்த முன்னறிவிப்பு 2027 ஆம் ஆண்டுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உதாரணமாக, 2027 ஆம் ஆண்டுக்குள், வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய பற்றாக்குறை ஏற்படாவிட்டாலும், 3911 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நாட்டை நேசிக்கும், எதிர்கால சந்ததிகளுக்காக ஒரு தேசமாக முன்னேறிய மற்றும் அபிவிருத்தி அடைந்த நாட்டில் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு இந்த இணக்கமான வேலைத்திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு நாடு என்ற ரீதியில் அனைவரின் ஆதரவும் தேவை.

மேலும், நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுவதை யாராவது எதிர்த்தால் அவர்கள் தேச துரோகிகளாக வரலாற்றில் பதியப்படுவார்கள் என்பதைக் கூற வேண்டும்” என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version