Home இலங்கை அரசியல் அமெரிக்காவில் இருந்து இலங்கை வருவதில் பசிலின் முடிவு

அமெரிக்காவில் இருந்து இலங்கை வருவதில் பசிலின் முடிவு

0

கடந்த செப்டெம்பர் மாதம் திடீரென நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இலங்கை திரும்பும் எண்ணம் இல்லை என மொட்டுக்கட்சியின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட அவர் தீர்மானித்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ச கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி திடீரென நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

திடீர் வெளிநாட்டுப் பயணம்

பசில் ராஜபக்சவின் திடீர் வெளிநாட்டுப் பயணமானது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற போதிலும், பொதுஜன பெரமுன கட்சியின் தோல்வியே அவரது விலகலுக்குக் காரணம் என எதிர் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலின் அடிமட்ட செயற்பாடுகளிலும், பிரசார நடவடிக்கைகளிலும் தலையீடு இருக்காது எனவும், ஏதாவது ஒரு வகையில் ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் அவர் தொலைபேசியில் அறிவுறுத்துவார் எனவும் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் மொட்டு கட்சியின் பலமான அரசியல்வாதிகள் என பெயர்பெற்ற மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்புக்கள் நடைபெறவுள்ள பொதுதேர்தலில் போட்டியிடவில்லை.

இதில் நாமல் ராஜபக்ச மாத்திரமே பொது தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

இந்த முடிவு நிரந்தரமில்லை எனவும்,  அரசியலில் இருந்து தற்காலிக விலகல் ஒன்றையே ராஜபக்சர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பசிலின் நோக்கம்

எனினும் பசிலும் அதே நோக்கத்தில் உள்ளாரா? அல்லது முலுமையான அரசியல் விலகலை எதிர்பார்க்கின்றாரா? என சில அரசியல் தரப்புகளில் இருந்து கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஏனைய அரசியல் கட்சிகள் தற்போது பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், மாற்றத்திற்கான மக்களின் முயற்சியினால் பசில் ராஜபக்சவால் மீண்டும் அரசியலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் தரப்புகளில் குறிப்பிடப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version