பொது மக்களின் பணத்தை
ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என சிவில் விமானப் போக்குவரத்து
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் நேற்று (23.04) இரவு இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் இருந்து புத்தளத்திற்கு சொப்பின் பையுடன் வந்தவர்கள் இன்று பத்து
கப்பல்களை வாங்கும் நிலையை அடைந்துள்ளனர். டக்ளஸ் எல்லா அரசிலும் அமைச்சராக
இருந்தார்.நாங்கள் யாரையும் பாரபட்சம் பார்க்க மாட்டோம்.
சட்டம் சாதாரண மக்களுக்கே
நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதே உண்மையான
அரசியல். உங்களுக்கு தெரியும் இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் பெரிய
மனிதர்களுக்கு இருக்கவில்லை. அது சாதாரண மக்களுக்காகவே இருந்தது.
ஆனால் இன்று
அதனை உங்களின் வாக்குகளின் மூலம் மாற்றியுள்ளோம். இன்று மிகப் பெரிய இலஞ்ச
ஊழலில் ஈடுபட்ட முதலைகளை பிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வேலை
நடக்கிறது.
முன்னொரு காலத்தில் அமைச்சர்களை கண்டு பொலிஸார் ஓடி ஒளிந்தார்கள்.
இன்று பொலிஸிற்கு பயந்து அமைச்சர்கள் ஓடி ஒளியும் நிலையை நாங்கள்
உருவாக்கியிருக்கிறோம்.
கிளிநொச்சியில் ஒருவர் கேட்டார் வட மாகாணத்தில் இருக்கின்ற கள்வர்களை நீங்கள்
பிடிக்கமாட்டீர்களா என்று. இங்கே இருக்கின்ற கள்வர்களையும் நாங்கள்
பிடிப்போம்.
பெரிய முதலைகள் கொழும்பிலே தான்
இருக்கிறார்கள். ராஜபக்ஸ மிகப் பெரிய முதலை. நாமல், யோசித்த ஆகியோருக்கு பொது
மக்களின் பணத்தை சூறையாடியதற்காக வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.
எனவே உங்கள்
வாக்குகள் மூலம் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
நாட்டின் பாதாளக் குழுக்களை உருவாக்கியது ராஜபக்சக்களும், விக்ரமசிங்கவும், பிரேமதாசக்களுமே.
பொருளாதார பிரச்சினைகள்
முன்பு சோதனை சாவடிகளில் பெண்கள் பொட்டு வைத்துச் சென்றால் இருமுறை சோதனை
செய்வார்கள். பொட்டு இல்லாவிடில் ஒரு தரம் செய்வார்கள். முஸ்லிம் மக்கள்
என்றால் மூன்று தரம் செய்வார்கள். அதை மாற்றும் செயற்பாட்டை நாம்
முன்னெடுத்துள்ளோம்.
நாங்கள் இந்த அரசை பொறுப்பெடுத்து 5 மாதங்களே ஆகின்றது.
முச்சக்கரவண்டியை வேகமாக திருப்பலாம். பேருந்தையும், கப்பலையும் வேகமாக
திருப்புவது கடினமே. பிழையான வழியில் சென்ற தேசத்தையே திருப்ப நாம்
முற்பட்டுள்ளோம்.
உங்களுக்கும் எனக்கும் கிடைத்தது சொர்க்கமான பூமி அல்ல.
வங்குரோத்தான ஒரு நாடு. ரணில் இந்த நாட்டை ஆண்ட போது டொலரின் பெறுமதி காலை ஒரு
விலையிலும், மாலை ஒரு விலையிலும் இருந்தது. இன்று அதில் ஒரு ஸ்திரத்தன்மை
காணப்படுகின்றது. உங்கள் பொருளாதார பிரச்சினைகள் தீர்வதற்கு கொஞ்சக் காலம்
எடுக்கும்.
காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகன் மீண்டும் கிடைத்தது போல வடமாகாணம் எமக்கு
கிடைத்துள்ளது. அதனை நாங்கள் அன்போடு பாதுகாப்போம். வடக்கை வளப்படுத்த எம்மால்
முடிந்த அனைத்தையும் செய்வோம்.
பலாலி விமான நிலையத்தை விருத்தி செய்வோம்.
அங்கு கொழும்பில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த நாங்கள்
எதிர்பார்க்கவில்லை. கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குவோம்.
காங்கேசன்துறை,
பரந்தன், மாங்குளம் ஆகிய பகுதிகளில் அவை அமையவுள்ளன. அதன் பிறகு உங்களது
உறவுகளுக்கு சொல்லுங்கள். கனடா சென்று பனியிலே கஸ்ரபடும் நிலை மாறும் என்று.
ஈஸ்டர் தாக்குதல்
இந்த பிரதேசத்தில் இருக்கும் காணியை யுத்த தேவைகளுக்காகவும் அதற்கு பிறகும்
இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். பொது மக்களின் காணிகளை அவர்களுக்கே
வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 25 பகுதிகளில் 100
ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை விரைவில் விடுவிப்பதற்கு அடையாளம் கண்டுள்ளோம்.
சிலர் நினைக்கிறார்கள் தாங்கள் பிடித்த நிலங்களை அப்படியே வைத்திருக்க
வேண்டும் என்று.
ஏனெனில் மீண்டும் ஒரு யுத்தம் வரலாம். வந்தால் தங்களுக்கு
சுலபம் என நினைக்கிறார்கள். மீண்டும் ஒரு யுத்தம் வருமா என்று உங்களிடம்
கேட்கிறேன். இனிமேல் யுத்தம் வராது. நாங்கள் தேசிய சமாதானத்தை நிலை நிறுத்தும்
ஒரு தேசத்தை கட்டி எழுப்புவோம்.
நிலங்களை விடுவிக்கும் போது தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு கஸ்ரமாக இருக்கும்.
அதேபோல வடக்கிலும் இனவாதிகள் உள்ளனர். நாலு மாதத்தில் ஒரு அப்பக்கடையை போடுவதே
கடினம். நாங்கள் ஆனையிறவு உப்பு உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம்.
அதனை தொடங்கிய
பின்னர் சுமந்திரனுக்கு அது பிரச்சினையாக உள்ளது. உப்பு பக்கற்றில் பெயர்
பிழையாம். உப்பிலே நீங்கள் பார்ப்பது பெயரையா, சுவையையா. இவ்வாறான சின்ன
விடயங்களுக்காக இனவாதத்தை தூண்டும் ராஜபக்ச போன்ற சகோதரர்கள் வடக்கிலும்
உள்ளனர்.
தெற்கின் கம்மன்பில போன்றோர் வடக்கிலும் உள்ளனர். அரசியல் அநாதைகளாக
உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் இனவாதத்தை விதைக்கிறார்கள். ஈஸ்டர்
தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில் தான் பிள்ளையானை கைது செய்திருக்கிறோம்.
அவரை கைது செய்தவுடன் அவருக்கு தொலைபேசி அழைப்பில் கதைக்க வேண்டும் என
முதலாவதாக முற்பட்டவர் யார் என்று தெரியுமா பிள்ளையானின் மனைவி அல்ல. ரணில்
விக்ரமசிங்க. அவர்கள் இருவரும் நண்பர்களா. ஒருபோதும் இல்லை.
கம்மன்பில
பிள்ளையானின் சட்டத்தரணியாக ஏன் மாறுகிறார். அவர் ராஜபக்சவின் கையாள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய விசாரணை
நடத்தப்படும் போது ராஜபக்ச, ரணில், சஜித் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
நாட்டை வளப்படுத்த முற்படும் போது கள்வர்கள் குழப்பமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளாார்.
