மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று(22.05.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி, மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரையே இவ்வாறு முதலை இழுத்துச் சென்றுள்ளது.
பொலிஸார் மேலதிக நடவடிக்கை
முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை கடந்த இரண்டு நாட்களாக குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, இன்று காலை இடுப்புக்கு கீழ் பகுதி அற்ற நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
