Home இலங்கை அரசியல் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் – காலிஸ்தான் தீவிரவாதியின் புதிய மிரட்டல்

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் – காலிஸ்தான் தீவிரவாதியின் புதிய மிரட்டல்

0

ஏர் இந்தியா (Air India) விமானங்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

நவம்பர் 1ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என இன்று (21.10.2024) குர்பத்வந்த் பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியா உட்பட பல்வேறு விமானங்களுக்கு அடுத்தடுத்து மிரட்டல் வரும் நிலையில், இந்த மிரட்டல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சீக்கிய இனப்படுகொலை

ஏர் இந்தியா உட்பட பல விமானங்களுக்குக் கடந்த சில நாட்களாக வரிசையாக மிரட்டல் வருகிறது. இதனால் அவசர அவசரமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், அனைத்து மிரட்டல்களுமே போலியாகவே உள்ளது 

இந்நிலையில், சீக்கிய இனப்படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்றும் காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் (Canada) இரட்டைக்குடியுரிமை வைத்துள்ள சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் நிறுவனரான பன்னுன் கடந்த ஆண்டும் இதே நேரத்தில் இப்படியான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சீக்கியர்களுக்கு தனி இறையாண்மை கொண்ட நாடு வேண்டும் என்று கோரி வரும் எஸ்எஃப்ஜெ என்ற அமைப்பை வழிநடத்தி வரும் குர்பத்வந்த் பன்னுன், தேசதுரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version