Courtesy: Sivaa Mayuri
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய காலம் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் அமைதியானதாக இருந்தது.
எனினும், செப்டெம்பர் மாதத்திலிருந்து தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரசாரம் (CAFFE) அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக செப்டம்பர் 08 முதல் செப்டம்பர் 14 வரை வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வன்முறை சம்பவங்கள்
அச்சுறுத்தல், அரசியல் கட்சி ஆதரவாளர்களைத் தாக்குதல் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களில் பெரும்பாலானவை பதிவாகியுள்ளன என்று கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்களை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தப் போக்குகள் தொடருமானால், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அது பாதகமாக அமையும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரசாரத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.