Courtesy: Sivaa Mayuri
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு(Ajith Nivard Cabraal) எதிராக, மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணையகம் தீர்மானித்துள்ளது.
கிரீஸ் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது கிரேக்கப் பங்கு பத்திரங்களில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபாய் நட்டமேற்படுத்தியமை தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னதாக, பிரதிவாதியான கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் இலஞ்ச மற்றும் ஊழல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை என்று கூறி, அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, கப்ரால் வழக்கிலிருந்து தொழில்நுட்ப ரீதியாக விடுவிக்கப்பட்டார்.
அத்துடன், குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனையோரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அந்த வழக்கின் தொழில்நுட்பச் சிக்கல், இயக்குநர் நாயகம் நியமிக்கப்படாத சூழ்நிலையை குற்றப்பத்திரிகையில் வெளிப்படையாகக் குறிப்பிடாமை போன்ற விடயங்களை சரிசெய்து மீண்டும் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய ஆணையகம் திட்டமிட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/cabral-invested-billions-rs-srilanka-charged-again-1717946002
