எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரங்களில் இது வரை காலமும் பெரிய அளவிலான வன்முறை
சம்பவங்கள் குறைந்த அளவில் பதிவாகிய போதிலும் தேர்தல் நெருங்கும் போது இந்த
சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஜனாதிபதித் தேர்தல்
கண்காணிப்பு நிறுவனமான கெபே நிறுவனத்தின் பணிப்பாளர் எச்.பாணகல தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை தெளிவு
படுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“நியமான தேர்தல் ஒன்றினை நடத்துவதற்காக நாடாளவிய ரீதியில் சுமார் 3500
கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் அந்த தெளிவு
படுத்தும் நடவடிக்கை நாடாளவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.
அத்துடன், இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சிலரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தல் இலங்கை
மக்களை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான தேர்தலாக காணப்படுவதனால் இந்த
தேர்தலில் வன்முறை சம்பவங்கள் தேர்தல் காலத்திலும் தேர்தல் முடியந்த பின்னும்
ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
அதற்கு சிறந்த உதாரணமாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் வைராக்கிய கருத்துக்களை குறிப்பிடலாம்.
இதனால் இந்த தேர்தலில் வன்முறைகள் பதிவானால் அது வெற்றி பெரும் வேட்பாளருக்கோ அல்லது
தோல்வியுறும் வேட்பாளருக்கோ பாதிப்பு ஏற்பட போவதில்லை.
அது முழுக்க முழுக்க தேர்தல் பெறுபேற்றினையே பாதிக்கும் என்பதுடன் இந்த வன்முறைகளால்
பாதிக்கப்படுவது தேர்தலில் போட்டியிடுபவர்கள் அல்ல அது உங்கள் கிராமத்தில்
உள்ளவர்கள் அல்லது உங்கள் சகோதரர்கள் என்பதனை நாம் புரிந்து கொண்டு
வெற்றிபெற்றால் மிகவும் அமைதியான முறையில் அதனை அனுஷ்டிக்க வேண்டும்.
மாறாக தோல்வியுற்றால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, எந்த காரணத்தினையும் கொண்டு சமூகத்தில் பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்
என்று வேட்பாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இது வரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சுமார் 700 இற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்துள்ளன.
அதில் பெரும்பாலானவை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளமை அரச சொத்துகளை முறைகேடாக
பயன்படுத்துவது அவதானிக்க கூடியதாக உள்ளது.
இது சம போட்டியினை உருவாக்குவதற்கு ஏற்ற சுழல் அல்ல. எனவே அரச ஊழியர்களிடமும்
வேட்பாளர்களிடமும் நாம் கேட்டுக்கொள்வது நியமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான
ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
அதேநேரம் இந்த தேர்தலில் நடவடிக்கைகளை தேர்தல்
திணைக்களம் எவ்வாறு கையாள்கிறது ஊடகங்கள் எவ்வாறு இந்த தேர்தல் நடவடிக்கைகளை
முன்னெடுக்கின்றது போன்ற விடயங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.” என அவர்
தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதியாக தேர்தலுக்காக பதாதையில் கையொப்பமிடும் நிகழ்வும் அமைதியான
தேர்தல் பிரசாரத்திற்கான சுவரொட்டிகளும் கையளிக்கப்பட்டுள்ளன.