Home இலங்கை சமூகம் கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து

0

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களினை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த
ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் கட்டாணை (writ) மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுத்தாக்கலை இலங்கை ஆசிரியர்
சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் ப்ரியந்த
பெர்னாண்டோ உட்பட பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்கள் முன்வைத்திருந்தனர்.

இடமாற்றக் கொள்கை

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற
விடயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபை மற்றும் ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு
சபை ஆகியன சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்
இடமாற்றக் கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும்
கூறி தங்களது இடமாற்றங்களை ரத்து செய்யக் கோரியும் தங்களது மனுவில்
சுட்டிக்காட்டி இருந்தனர்.

இதனடிப்படையில், இது குறித்த வழக்கு இன்று ( 03) விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய கிழக்கு மாகாண சபை
சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட அனைத்து மனுதாரர்களினதும் இடமாற்றங்களினை இரத்து
செய்வதாகவும் அவர்கள் இடமாற்றத்திற்கு முன்னர் எந்தப் பாடசாலைகளில்
கற்பித்தார்களோ அந்தப் பாடசாலைகளில் அவர்களை மீள அமர்த்துவதற்கும் எதிர்வரும்
காலங்களில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றி இடமாற்றங்கள்
செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

இடமாற்றம் இரத்து 

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கைத் தாக்கல்
செய்த பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினதும் இடமாற்றம் இரத்து
செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, அவர்களுக்குரிய உத்தியோகபூர்வக் கடிதங்களை எதிர்வரும்
நாட்களில் வழங்கப்படவுள்ளதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உறுதி
அளித்திருந்தனர்.

மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில்
சட்டத்தரணிகளான றாஸி முஹம்மட் ஜாபிர் மற்றும் எப். எச். ஏ. அம்ஜாட் ஆகியோர்
தோன்றி காத்திரமான வாதங்களை முன்வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version