கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளில்
தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் சில இந்த வாரம் இடம்பெறவுள்ளன.
ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகள் பலவும் கொழும்பு மாநகர சபையில்
ஆட்சியமைப்பதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கொழும்பு மாநகர சபை
கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில்
தேசிய மக்கள் சக்தியில் இருந்து 48 உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்பட்டிருக்கின்றனர்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட
எதிர்க்கட்சிகளில் இருந்து 69 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் தனிக் கட்சியாகத் தேசிய மக்கள் சக்தியில் இருந்து அதிக
உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குரிய
பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளவில்லை.
இதன் காரணமாகவே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற
சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தீர்க்கமான பேச்சுவார்த்தைகள்
தமக்கு அதிகளவான ஆசனங்கள் கிடைத்துள்ளதால் தாமே கொழும்பு மாநகர சபையில்
ஆட்சியமைக்கப் போவதாக ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தெரிவித்து
வருகின்றது.
எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில்
எதிர்க்கட்சிகள், கூட்டணியமைத்துப் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி கொழும்பு
மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய
தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் இது
குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று
குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையிலேயே இந்த வாரமும் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள்
இடம்பெறவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
