மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை
உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள்
அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி
அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி
அமைச்சின் ஆலோசனைச் சபைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர்
இதனைக் குறிப்பிட்டார்.
அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெறுவதற்கான சம வாய்ப்பை
உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தின் போது, ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் தற்போதைய
முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒரு ஆரம்பப்
பாடசாலையில் இருக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் மற்றும் அளவுகோல்கள் அடங்கிய
அறிக்கையொன்றும் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்டது.
வகுப்பறைகளில் இருக்க வேண்டிய நவீன உபகரணங்கள், மாணவர்களைக் கவரும் வகையில்
பாடசாலை வளாகத்தை வடிவமைத்தல், வெளிக்களச் செயற்பாடுகளுக்கான விசேட
வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைத்தல் போன்ற விடயங்கள் இந்த
அளவுகோல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொதுவான மாதிரி
எதிர்வரும் காலங்களில் இவற்றை மேலும்
மேம்படுத்தி, அனைத்து ஆரம்பப் பாடசாலைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான
மாதிரியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர்
தெரிவித்தார்.
அத்துடன், இந்த அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திலும் தெரிவு
செய்யப்பட்ட சில பாடசாலைகளை மாதிரிப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கு அரசு
திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடப்பு 2026 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளின் பௌதிக
வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால்,
அத்திட்டங்களை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் ஆலோசனை
வழங்கினார்.
இத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனுடன்
முன்னெடுப்பதற்குக் கண்காணிப்பு நடவடிக்கைகளில், அந்தந்த மாகாணங்களுக்குப்
பொறுப்பான கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து செயற்பட
வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனுடன், தொழில்சார் கல்வி நிலையங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்
வீதத்தை அதிகரித்தல் மற்றும் அதற்குத் தகுந்தாற்போல் அவற்றின் உட்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தின் போது பிரதமரால் விசேட
கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நாடாளுமன்ற ஆலோசனைச் சபைக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி
அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழில்சார் கல்விப் பிரதி அமைச்சர் நலின்
ஹேவகே ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ
உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகள் பலரும்
கலந்துகொண்டனர்.
Source: https://tamilwin.com/article/common-model-plan-primary-schools-pm-harini-1781286801
