எதிர்வரும் ஆண்டுகளில் சிங்கப்பூருக்கும் (Singapore) இந்தியாவுக்கும் (India) இடையிலான உறவுகள் தொடர்ந்து செழிப்புறும் என்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் (Tharman Shanmugaratnam) நம்பிக்கை தெரிவித்துள்ளார்
செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் 20ஆம் ஆண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) சிங்கப்பூர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதாகவும் அவரது வெற்றி, இந்திய மக்களின் வாழ்க்கைத்தரம் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளதைக் காட்டுவதாகவும் தர்மன் கூறியுள்ளார்.
தெற்காசிய ஆய்வுக் கழகம்
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளின் மீதான ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் அவற்றுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்குமான உறவுகளை வலுப்படுத்துவதும் இக்கல்வி நிலையத்தின் முக்கிய நோக்கமாகும்.
அந்தவகையில், இருநாட்டு உறவுகளின் சீரான நிலைக்கு தெற்காசிய ஆய்வுக் கழகம் பெரும் பங்காற்றியுள்ளதாக கூறியுள்ள அவர் தன் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் இருந்து திறனாளர்களை ஒன்று திரட்டி சிங்கப்பூரின் நீண்டகாலத் திட்டங்களுக்கு கழகம் உதவும் என தர்மன் நம்பிக்கை தெரிவித்தார்.
Source: https://ibctamil.com/article/stronger-singapore-india-relations-ahead-1720793569
