தரம் குறைந்த மருந்துப் பொருட்களினால் கண் பார்வையை இழந்தவர்களுக்கு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலையில் தரம் குறைந்த பிரிட்னிசிலோன் (Prednisolone) என்ற மருந்து வகையை வழங்கியதனால் சிலர் கண் பார்வையை இழக்க நேரிட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
இருப்பினும், இந்த நோயாளிகளுக்கு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த நட்டஈடு இதுவரையில் வழங்கப்படவில்லை என சுகாதார தொழிற்சங்க கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது.
கண் பார்வை சிகிச்சை
இந்த மருந்தினால் கண் பார்வையை இழந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்து வைத்தியசாலையில் தட்டுப்பாடாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்யும் போது பெருந்தொகை பணத்தை செலுத்த நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தரம் குறைந்த மருந்து பயன்பாட்டினால் கண் பார்வையை இழந்த நோயாளிகளை பராமரிக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சினை சார்ந்தது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோயாளிகள் அரசாங்க வைத்தியசாலையில் மருந்து இன்றி தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்ய நேரிடுவது அநீதியானது என தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/compensation-for-the-visually-impaired-1721105901
