கடுமையான வானிலை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் நோக்கில் இலங்கையின் திறனை மேம்படுத்துவதற்காக புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ரேடார் (Doppler Radar) அமைப்பை நிறுவுவதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (17.12.2025) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன் குறித்த டொப்ளர் ரேடாரை இலங்கை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரேடார்
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த ரேடார் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சியை வானிலை ஆய்வு மையத்தின் பாரிய மேம்படுத்தல் என தெரிவித்த அவர் இது மேலதிக அத்தியாவசிய கருவிகளுடன் பொருத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இது 2017 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட டொப்ளர் ரேடார் அல்ல எனவும் இந்த அமைப்பு முன்னறிவிப்பு மட்டுமல்ல, உயிர்களைப் பாதுகாக்கும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், “டித்வா” பேரிடரையடுத்து குறித்த டொப்ளர் ரேடார் விடயம் தொடர்பில் கடந்த அரசாங்கங்கள் அதிகளவில் விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டப்படி 2017 ஆம் ஆண்டளவில் இந்த டொப்ளர் ரேடார் அமைக்கப்பட்டு, ஒழுங்கான முறையில் பராமரிக்கப்பட்டிருப்பின் அண்மைய பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் ஓரளவு குறைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
