Home இலங்கை பொருளாதாரம் அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமாகிய புலம்பெயர்ந்தோர்! நியுயோர்க் மேடையில் அநுர வெளிப்படை

அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமாகிய புலம்பெயர்ந்தோர்! நியுயோர்க் மேடையில் அநுர வெளிப்படை

0

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு எதிர்வரும் ஆண்டில் திரும்பக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அநுர குமார கூறியுள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது.

2019 தேர்தலில் சுமார் 3 வீத வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். எனினும், 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களை இலங்கை மக்கள் முதல் முறையாக வெளியேற்றினர்.

அரசாங்கத்தின் சவால்

எங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று பொருளாதார நெருக்கடியைத் தணிப்பது. மற்றொன்று இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது.

பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம்.

அனைத்து சர்வதேச அமைப்புகளும், மதிப்பீட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும், இலங்கை ஒரு நெருக்கடியின் போது விரைவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடாக இருந்ததாக அறிக்கைகளை வழங்கியுள்ளன.

ஒரு பொருளாதாரம் இப்படி சரிந்தால், ஒரு நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நிபுணர்கள் கருத்துப்படி, 2022 ஆம் ஆண்டில் நாடு சரிந்திருந்தால், முந்தைய நிலைக்குத் திரும்ப 2032 ஆகும்.

எனினும், நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு முன்பு 2019 இல் இருந்த பொருளாதாரத்தை எதிர்வரும் ஆண்டில் நாம் அடைய முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version