Home இலங்கை சமூகம் யாழ். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழ். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

யாழ். நல்லூரில் (nallur) அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு நேற்று (18.9.2024) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதியரசர் ஏ.ஆனந்தராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

எனினும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் அதிகாரம் காவல்துறையினரிடம் இருப்பதால் இது தொடர்பில் அவர்களே இறுதி முடிவை எடுக்கலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்னார்.

உணர்வுபூர்வமாக அஞ்சலி

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி காவல்துறையினர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.

வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கிளிநொச்சியில் உள்ள வழக்கொன்றுக்காகச் சென்றதால் இந்த வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

எதிராளிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மகிந்தன், றமணன், ரிசிகேசன், கௌதமன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையானார்கள்.

நினைவேந்தல் நடத்த தடை இல்லை

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஏ.ஆனந்தராஜா, 2011ஆம் ஆண்டு சின்னங்களைப் பயன்படுத்த தடை விதித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டது .

எனினும் இறந்தவர்களின் நினைவேந்தல் நடத்த தடை இல்லை. இதன் பின்னர் 13 வருடங்களாக மக்கள் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர்.

அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, நாடாளுமன்றமோ எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்து வருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

வாகனப் பேரணிகள் 

இதேவேளை தேர்தல் காலம் என்பதால், அதைக் கருத்திற்கொண்டு அஞ்சலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் காவல்துறையினர் கோரினார்கள்.

இதற்கு, தேர்தல் காலத்தின்போது வாகனப் பேரணிகள் நடத்துவதற்கு மட்டுமே தடை விதிக்க முடியும் என்று தெரிவித்த நீதிவான், அவ்வாறு வாகனப் பேரணிகள் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதங்களை எதிர்த்தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் வழக்கை நீதிவான் முடிவுறுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version