டெல்லி கார் வெடி விபத்து எதிரொலியாக பாம்பன் புதிய தொடருந்து பாலத்தில் ஆயுதம்
ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை கார் வெடித்து விபத்து
ஏற்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை
அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்தும் சோதனை
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டுகள் கண்டறியும் மெட்டல் டிடெக்டர்
மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய தொடருந்து பாலத்தில்
தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் ஆயுதம் ஏந்தி பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நிய நபர்களுக்கு தடை
மேலும், பாம்பன் பாலம் வழியாக அந்நிய நபர்கள் யாரையும் செல்ல அனுமதிக்காமல்
மீனவர்கள் பாலத்தில் அமர்ந்து மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
பாம்பன் தொடருந்து பாலம் வழியாக வரும் தொடருந்து படிகளில் அமர்ந்து செல்பி
எடுக்கும் பயணிகளை உள்ளே செல்லுமாறும், வெளியே நிற்க வேண்டாம் எனவும்
அறிவுறுத்தியுள்ளனர்.
