முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைது செய்யப்பட்டதை சர்வதேச ஜனநாயக அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.
சர்வதேச ஜனநாயக அமைப்பின் தவிசாளராக சில காலம் கடமையாற்றிய ரணில் விக்ரமசிங்க சிறையில் அடைக்கப்பட்டமையை கண்டித்து அந்த அமைப்பு எக்ஸ் (x) தளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன் (Wajira Abeywardana) குறித்த செய்தியை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்தார்.
4 மணித்தியாலங்கள் வாக்கு மூலம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வஜிர, ”ரணில் விக்ரமசிங்க தனது வாழ்க்கையில் உணவு மற்றும் தனது கடமைகளை நேரம் ஒதுக்கி செய்பவர்.
அன்று அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 4 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
பின்னர் நீதிமன்றத்தில் பல மணிநேரம் சாட்சிக் கூண்டில் நின்றமை மற்றும் நீதிமன்றத்தில் மின்சார துண்டிப்பு ஏற்பட்ட காலதாமதம் ஆகியவற்றில் அவரின் உடல் நலம் திட்டமிடப்பட்டு பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
அவரின் வயதிற்கு ஏற்ப அவ்வாறான செயற்பாடுகள் அவருக்கு பலவாறான நோய்களுக்குள்ளாக்கியுள்ளது“ என தெரிவித்தார்.
