Home இலங்கை அரசியல் ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க ஒன்றிணைந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான கடிதங்கள் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததன் பின்னர் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை அண்மையில் கூடியது.

கட்சியில் இருந்து ஒருவரை வேட்பாளராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டதுடன், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில வாரங்களாக அக்கட்சியின் அரசியல்சபை கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பான கடிதங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version