Home இலங்கை அரசியல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட சட்ட மா அதிபர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட சட்ட மா அதிபர்

0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாக வெளியிட்டிருந்த குறிப்புகள்
குறித்து, இலங்கையின் சட்டமா அதிபர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சை
சந்தித்த போதே, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, தமது அதிருப்தியை
வெளிப்படுத்தினார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடத்தை

அத்துடன் ஐக்கிய நாடுகளின் ஆணையாளரது, அறிக்கையின் உள்ளடக்கங்களை மறுத்த
ரணசிங்க, அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெறும் 60ஆவது அமர்வில்
சமர்ப்பிக்கப்படும் குறிப்புக்களில், இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின்
நடத்தை குறித்து தெளிவூட்டப்படும் என்றும், இந்த குறிப்புக்கள் தற்போது
இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க்கின் அறிக்கையில் உள்ள
அவதானிப்புகளுக்கு ஒட்டுமொத்த அரசாங்கத்தின் பதிலின் ஒரு பகுதியாக இது
இருக்கும் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தம் தேவை

முன்னதாக, இந்த மாத ஆரம்பத்தில், தமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஜெனீவா
மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில், நீதிக்கு ஒரு முக்கிய தடை மற்றும்
கடுமையான மனித உரிமை மீறல்களைத் தொடர ஒரு சுயாதீனமான வழக்கு தொடுநர்
அதிகாரத்தை உறுதி செய்வதற்காக சட்டமா அதிபர் அலுவலகத்திற்குள் சீர்திருத்தம்
தேவை வலியுறுத்தப்பட்டிருந்தது.

சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட பரந்த வழக்கு தொடுநர் விருப்புரிமை,
உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களின் மீது செயல்பட பொதுவான தயக்கம், பொலிஸ்
தரப்பின் வரையறுக்கப்பட்ட புலனாய்வு திறன், தகுதிவாய்ந்த தடயவியல் நிபுணர்கள்
இல்லாமை மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகளின் வெற்றிடங்கள் ஆகியவை
பாதிக்கப்பட்டவர்கள் நீதியை அணுகுவதை கூட்டாகத் தடுக்கின்றன மற்றும்
தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கின்றன என்றும், ஐக்கிய நாடுகள் ஆணையரின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

NO COMMENTS

Exit mobile version