Home முக்கியச் செய்திகள் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகு: உரிமையாளருக்கு தடுப்புக் காவல்!

போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகு: உரிமையாளருக்கு தடுப்புக் காவல்!

0

போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பலநாள் கடற்றொழில் படகின் உரிமையாளரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவு பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் நேற்று (01.11.2025) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, நாட்டின் மேற்குப் பகுதியில் ஆழ்கடலில் வைத்து போதைப்பொருள் தொகையுடன் நெடுநாள் கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த கடற்றொழில் படகின் உரிமையாளர் நேற்று (01.11.2025) மாலை காலி பிரதேசத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டார்.

ஐந்து பில்லியன் பெறுமதி

குறித்த கடற்றொழில் படகு இன்று (02.11.2025) முற்பகல் திக்கோவிட்ட கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்போது, சுமார் 350 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் பெறுமதி சுமார் 5 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகை கைப்பற்றும் போது படகில் இருந்த 6 சந்தேகநபர்களையும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version