Home இலங்கை அரசியல் வடக்கில் இராணுவத்தால் பரவும் போதைப்பொருள்: கஜேந்திரகுமார் எம்.பி குற்றச்சாட்டு

வடக்கில் இராணுவத்தால் பரவும் போதைப்பொருள்: கஜேந்திரகுமார் எம்.பி குற்றச்சாட்டு

0

வடக்கில் இராணுவத்தாலேயே போதைப்பொருள் விநியோகம் நடைபெறுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (23.10.2025) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப்
பகுதிகளில் போதைப்பொருள் பூச்சிய பாவனையில் இருந்தது. அவர்கள் மக்களைப்
பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இயங்கியதால் இது சாத்தியமானது.

பொறுப்புணர்வு

இந்தக் காலப்பகுதியில் வடக்கில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும்
விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் இருந்தமையினால் அங்கு போதை அச்சுறுத்தல் குறைந்த
அளவிலேயே இருந்தது.

எவ்வாறாயினும், போர் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டுக்கு பின்னரே வடக்கில்
பாரியளவில் போதைப்பொருள் பரவல் தொடங்கியுள்ளது.

இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். இன்று
சில பகுதிகளில் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக இராணுவ முகாம்
மாறியுள்ளது.

விடுதலைப்புலிகளின் புரட்சியைத் தோற்கடிப்பதற்கு இராணுவத்தின் ஊடாகப்
பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளையும் பொலிஸ் நிலையங்கள் ஏற்க
மறுகின்றன.

எனவே, போதைப்பொருள் பரவலில் இராணுவத்துக்கு உள்ள தொடர்பு குறித்த தேடிப்
பார்க்க வேண்டும்.

பொலிஸ், கல்வி, சுகாதார போன்ற சமூகத்துக்கு மிகவும் தேவைப்படும் விடயத்தை
அந்ததந்த மக்களிடமே விடவேண்டும். அப்போதுதான் தங்களது மக்களுக்கு தாம்
பொறுப்பானவர்கள் என்ற உணர்வு ஏற்படும்.

ஆக்கபூர்வமான நடவடிக்கை

மாறாக, வடக்கு, கிழக்குடன் எவ்வித தொடர்பில்லாத தரப்பினரால் அங்குள்ள
பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது. கடந்த காலங்களில் இத்தகைய
தரப்பினரின் செயற்பாட்டாலேயே வடக்கு மாகாணம் திட்டமிட்ட வகையில் கல்வி
உள்ளிட்ட விடயங்களில் பின்தள்ளப்பட்டது.

எனவே, அரசு எடுக்கும் போதைப்பொருள் ஒழிப்புக்குத் தேசிய வேலைத்திட்டத்துக்கு
தங்களால் பூரண ஆதரவு வழங்கப்படும்.

எனினும், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாயின் இந்தச் செயற்பாட்டிலிருந்து
இராணுவத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும்.

நிபுணத்துவம் பெற்றவர்களை மாத்திரம் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தினால்
மாத்திரமே போதைப்பொருள் ஒழிப்பு என்பது சாத்தியப்படும்.

அதேநேரம், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மாறாக போதைப்பொருளை விற்பவர்களே
தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version