நாளை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும்
பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்
ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டில் புள்ளடி மட்டும்
இடவேண்டும் என்று வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை,
வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஒன்றை
எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து
வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக
அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி
ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின்
சின்னங்களும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக்
குழுக்களின் சின்னங்களும் இருக்கும். அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும்.அதில் புள்ளடி இட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில்,
உரையாற்றியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,
“வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ,
பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும்
நிராகரிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
