2025 ஜூன் மாதத்தில் மின்சார கட்டண திருத்தத்தின் போது, கட்டண அதிகரிப்பு
மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றின்போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுடன் இணைந்து, இந்த செலவு – மின்சார விலை
நிர்ணயம் மேற்கொள்ளப்படுவதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மின்சாரம் விலை நிர்ணயம்
தொடர்ந்தும் திறைசேரி, இலங்கை மின்சார சபைக்கு காலவரையின்றி மானியம் வழங்க
முடியாது.
எனவே, உண்மையான உற்பத்தி செலவுகளின் அடிப்படையில் மின்சாரம் விலை நிர்ணயம்
செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் மீன்பிடித் துறை போன்ற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, திறைசேரி
மூலம் நிவாரணம் வழங்க முடியும்.
எனினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போன்ற அரசுக்குச் சொந்தமான
நிறுவனங்கள், வணிகக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று
ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி, மின்சார கட்டண உயர்வு தொடர்பான ஊகங்களை ஜனாதிபதி உறுதி செய்துள்ளார்.
மின்சாரக் காட்டணங்களின் அடுத்த திருத்தம்
மின்சாரக் காட்டணங்களின் அடுத்த திருத்தம் ஜூன் 1ஆம் திகதி மேற்கொள்ளப்படும்
என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது ஒரு தேர்தல் தந்திரம் அல்ல என்றும், கணிப்புகள் மற்றும் ஒழுங்குமுறை
மேற்பார்வையின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சரிசெய்தல் என்றும் அவர்
கூறியுள்ளார்.
இலங்கை மின்சார சபை 220 பில்லியன் மரபுக் கடன் சுமையை கொண்டுள்ளது.
அது இப்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தக் கடனில் ஒரு பகுதியே கட்டண மறுசீரமைப்பில். சிறிது அதிகரிப்பை
ஏற்படுத்தும்.
எனினும், அது, 2024 டிசம்பரில் இருந்த விகிதங்களை விடக் குறைவாக இருக்கும்
என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
