கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் (Senthil Thondaman) சுற்றுச் சூழல் தொடர்பான அதிபரின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெமிற்கும் (Erik Solheim) இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (02) இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சுற்றுச்சூழலை உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற வைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில்தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முயற்சிகளில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
அதன் ஒரு முக்கிய கட்டமாக சுற்றுச் சூழல் தொடர்பான அதிபரின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெம் மற்றும் நேர்வேயின் (norway) நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஸு கிளாடி (Himanshu Gulati) ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சுற்றுச்சூழலை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும் கிழக்கு மாகாண சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்பு செயலாளர், திருகோணமலை (Trincomalee), மட்டக்களப்பு (Batticaloa) மற்றும் அம்பாறை (Ampara) ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச சபை செயலாளர், நகரசபை செயலாளர் மற்றும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கிழக்கில் சுற்றுச் சூழல் பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை இன்று முன்னெடுத்தனர்.
Source: https://ibctamil.com/article/eric-solheim-visited-the-eastern-province-1714647464
