Home இலங்கை சமூகம் மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் போராளி!

மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் போராளி!

0

மன்னார் (Mannar)- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (5) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கம்பிகளின் மொழி பிறேம்“ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் என்ற 42 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொலைபேசியில் உரையாடினார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் ”குறித்த நபர் நேற்று இரவு (05) அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார்.

இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தம் போட்டுள்ளார்.

பின்னர் குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

மன்னார் பொது வைத்தியசாலை

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்தவர் என்பதுடன் பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version