Home இலங்கை குற்றம் முன்னாள் அமைச்சர்களின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம் – அதிரடிக்கு தயாராகும் அநுர

முன்னாள் அமைச்சர்களின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம் – அதிரடிக்கு தயாராகும் அநுர

0

கடந்த அரசாங்கங்களின் போது இலங்கைக்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதன் காரணமாக இலங்கையில் தமது முதலீடுகளை அவர்கள் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய, அந்த முதலீடுகள் இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் கொண்டு செல்லப்பட்டதாக, இலங்கைக்கான தென்கொரிய மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்த தென்கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன் ஆகியோர் இந்த முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

விலைமனுக் கோரல்

முத்துராஜவெலயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குழாய் மூலம் எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக அழைக்கப்பட்ட திறந்த விலைமனுக் கோரல் கொரிய முதலீட்டாளருக்கு கிடைத்ததாக, தென்கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசியல்மட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக அந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: https://tamilwin.com/article/ex-sri-lankan-ministers-who-demanded-ransom-1736057000

NO COMMENTS

Exit mobile version