புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில், விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடிய
அகழ்வுப்பணியை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில்
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார்
காணியொன்றில் பதுங்கு குழிக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த
அகழ்வுப்பணியை இன்றையதினம்(09.07.2025) முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்தினை முல்லைத்தீவு நீதவான் பார்வையிட்டதன் பின்னரே அகழ்வுப்பணிகள்
ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு கடமை
விடுதலைப்புலிகளால் குறித்த தனியாரின் காணி இரண்டு ஏக்கர் வரையிலான காணி விடுதலைப்புலிகளின் முகாமாக காணப்பட்டுள்ளது.
இந்த காலட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் தளபதிகள்
உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக பரியளவில் நிலக்கீழ் பதுங்கு
குழி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு போரிற்கு பின்னர் அந்த காணியில்
கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள்.
போரின் குண்டுத்தாக்குதலால் பதுங்கு குழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில்
காணப்பட்டுள்ளதால், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில் நிலத்தின்
கீழ் சுமார் 20 அடி ஆளத்தில் இந்த நிலக்கீழ் பங்கர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலக்கீழ் பங்கரில் விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ
புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பி சிலர் வீட்டின் உரிiயாளர்களுக்கு தெரியாமல்
தோண்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை வீட்டின் உரிமையளர்களுக்கு
தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த பகுதியினை
பார்வையிட்டுள்ளார்கள்.
அகழ்வு நடவடிக்கைகள்
இதன்போது, பாரியளவிலான பங்கர் காணப்படுகின்றமை புலனாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்கு தொடரப்பட்டு
(9) இன்று குறித்த பங்கரினை தோண்டும் நடவடிக்கைக்காக கிராம சேவையாளர் உள்ளிட்ட
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி கனரக
இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பி காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும்
நடவடிக்கையும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹெரத் தலைமையிலான
பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததற்கு அமைய புதுக்குடியிருப்பு
பொலிஸார், கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட
அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் இணைந்து குழியினுள் இருக்கும் நீரினை
அகற்றும் பணி இடம்பெற்றதுடன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஜேசிபி
இயந்திரமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி
த.பிரதீபன் குறித்த பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளதுடன் தொடர்ந்தும் நாளை
(10) அகழ்வு பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
மேலதிக தகவல்-கீதன்
