கடற்றொழிலாளர்கள் தீவிரவாதிகளைப் போல் நடத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) குற்றம் சாட்டியுள்ளார்.
குச்சவெளியில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் கடற்படையினரால்
சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு
தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடற்தொழில் திணைக்களத்தில் முறையாக சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் பெற்று
கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி
சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிய கிடைக்கிறது.
போதைப்பொருள் கடத்துபவர்கள் போல் சோதனை
சுருக்கு வலை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை
திருகோணமலை போன்ற குடா பகுதிகளுக்கு பொருத்தமற்ற ஒன்று என நான் பல வருடங்களாக
நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் சுட்டிக்காட்டி உள்ளேன்.
இதுவே இவ்வாறான
பிரச்சினைகளுக்கு மூல காரணம்.
ஹஜ்ஜு பெருநாள் நெருங்கியுள்ள இந்த நேரத்தில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள்
போதைப்பொருள் கடத்துபவர்கள் போல் சோதனை இட்டு அவர்களை மிரட்டுவதும்
பயமுறுத்துவதுமாக இருந்த சம்பவம் இன்று துப்பாக்கி சூட்டில் முடிவடைந்துள்ளது.
கடற்றொழிலாளர்கள் தீவிரவாதிகளை போன்றே இங்கு நடத்தப்படுகின்றனர்.
கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள கடற்படையினருக்கு யார் அதிகாரம்
வழங்கியது? இச்சம்பவத்தில் பாதிப்படைந்த கடற்றொழிலாளர்களுக்கு நீதி வழங்க நியாயமான
விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருகோணமலைக்கு பொருத்தம்
இல்லாத சுருக்கு வலை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல்
நிபந்தனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
