Home முக்கியச் செய்திகள் வெளிநாட்டிலிருந்து வந்த நால்வர் கட்டுநாயக்காவில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த நால்வர் கட்டுநாயக்காவில் கைது

0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1 கோடியே முப்பத்தி எட்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 462 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் இரண்டு விமானங்களில் வந்த நான்கு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழு கடந்த 23ஆம் திகதி பிற்பகல்வேளை அவர்களை கைது செய்தது.

இந்தக் கைது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய சுங்கச் சோதனைகளில் ஒன்றாகும் என விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்த நால்வர்

கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் 03.20 மணியளவில் அபுதாபியிலிருந்து EY-390 Etihad Airlines விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 23 வயதுடைய இரண்டு பயணிகளும் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பயணி ஒருவரும் அடங்குகின்றனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த “மான்செஸ்டர்” சிகரெட்டுகளின் 115 பெட்டிகள் கொண்ட 345 சிகரட் பைக்கற்றுக்களை அவர்கள் தங்கள் பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த போது, ​​சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மேலும், அதேநாள் பிற்பகல் 02.36 மணியளவில் சாஜாவில் இருந்து எயார் அரேபியா விமானமான G-9508 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நெலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மான்செஸ்டர் சிகரெட்டுகளின் 117 பெட்டிகளை அவர் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி, 92,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 462 சிகரெட் பெட்டிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான முறையான சுங்க விசாரணையை சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் ஜே.எல்.கே.பெர்னாண்டோ நடாத்தி, சட்டவிரோதமாக இலங்கைக்கு(sri lanka) கொண்டு வரப்பட்ட அனைத்து வெளிநாட்டு சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், நான்கு பயணிகளும் தலா நான்கு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். 

NO COMMENTS

Exit mobile version