பிரான்சில் தமிழர்கள் வாழும் பரிஸின் புறநகரப்பகுதியான சொய்ஸி-லெ-ருவாவில் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்ன் நதியில் மூழ்கியிருந்த நிலையில் இவை அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த மரணங்களுக்குரிய காரணங்கள் தெரியவரவில்லை.
இந்த உடலங்களுக்கு இன்னும் அடையாளம் காணப்படவில்லையென்றபோதிலும் அனைத்தும் வயது வந்த ஆண்களின் உடலங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள தொடருந்து தடத்தால், பயணித்த ஆர்.இ.ஆர் சீ ((RER C)) தொடருந்தில் பயணித்த பயணி ஒருவரே ஒரு உடலம் ஆற்றில் மிதப்பது குறித்த தகவலை காவல்துறைக்கு வழங்கியதை அடுத்து ஆற்றில் நடத்தபட்ட மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் அடுத்தடுத்து குறித்த நான்கு உடலங்களும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த உடலங்களுக்குரியவர்களில் மூன்று பேர் ஆபிரிக்க பூர்வீகத்தை கொண்டவர்களாகவும் ஒருவர் வட ஆபிரிக்க பூர்வீகத்தை கொண்டவராகவும் முதற்கட்டத்தில் அடையாளப்படுத்தபட்டுள்ளது.
பலகோணங்களில் விசாரணை
அண்மைய நாட்களில் பரிஸ் அல்லது புறநகர்ப் பகுதிகளில் நான்குபேர் காணாமல் போனமை குறித்து காவற்துறையில் எந்த பதிவுகளும் இல்லாத நிலையில் நான்கு உடலங்கள் ஒரே இடத்தில் மீட்கப்பட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் வகையில் தற்போது பலகோணங்களில் விசாரணைகள் தொடர்கின்றன.
இவர்கள் கொலைசெய்யப்பட்டார்களா? அல்லது போதைதாக்கத்தால் ஆற்றில் வீழந்து மரணித்தார்களா? இல்லையென்றால் தற்போதையை வெப்ப அலையை சமாளிக்க ஆற்றில் குளித்தபோது மூழ்கி இறந்தார்களா? என்ற அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
