Home உலகம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கனடாவில் விடுதலை நீர் சேகரிப்பு!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கனடாவில் விடுதலை நீர் சேகரிப்பு!

0

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின், பிரம்டன் நகரத்தில் அமையப்பெற்றுள்ள தமிழின அழிப்பு நினைவக வளாகத்தில், ‘கனடிய தமிழர் தேசிய அவை’ அமைப்பின் ஏற்பாட்டில், விடுதலைப் பெரு விருட்சத்திற்கான ‘விடுதலை நீர்’ சேகரிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

தமிழ் இனத்தினுடைய விடுதலை உட்பட தமிழ் அரசியல் கைதிகளின் விடியலுக்கான குறியீடாக, ‘குரலற்றவர்களின் குரல் அமைப்பினால்’ முன்னெடுக்கப்பட்டுவரும் விடுதலை நீர் சேகரிப்பு செயற் கருமத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த கவனம்தொடும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

“நிறைகுடம் சாய்த்து நீரதை வார்த்து சிறை வாடும் நம்மவரை உயிர்ப்புடன் மீட்டிட… தரை கிளரும் துளிர்தனை தல விருட்சமாக்கிடுவோம்… தூய நீர் வார்த்து, புனிதமரம் வானம்தொட அணிதிரண்டு எழுந்திடுவீர்..! ” என்ற கோஷம் முழங்கிட நிகழ்வு எழுச்சிகோலம் பூண்டுள்ளது.

நூதனக் கவனயீர்ப்பு போராட்டம்

விடுதலை நீர் வார்ப்பதில், பிரம்டன் நகரபிதா உட்பட அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், புலம்பெயர் தமிழ் உறவுகள் எனப் பல தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

மேலும், “இனத்தின் பெயரில் வஞ்சிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் விடுதலைக்காக தமிழ் மக்களாகிய நாம் மெய்யுணர்வுகொண்டு உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அந்த வகையில், தாயகத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் செரிந்து வாழக்கூடிய புலம்பெயர் நாடுகளின் ஒவ்வொரு நகர, மாநகர சபைகளிலும் இதுபோன்ற ‘விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வை’ ஒரு நூதனக் கவனயீர்ப்பு போராட்ட வடிவமாக முன்னெடுக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version