இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் போது மீட்பு நடவடிக்கைகளுக்கு உலங்கு வானூர்திகள் பற்றாக்குறையாக இருந்ததுடன் வெளிநாட்டு இராணுவத்தினரின் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டமை, இலங்கை அரசினால் பாதுகாப்பு செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் இராணுவ உயரதிகாரிகளினால் ஊழல் செய்யப்பட்டிருக்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது என அரசியல் ஆய்வாளர் மகா சேனன் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தின் போது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்க இராணுவங்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இந்திய இராணுவம் வடக்கில் பாலம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளமை இலங்கை இராணுவக் கட்டமைப்பின் இயந்திர இயல்புகள் பலமிழந்துள்ளதையே வெளிப்படுத்துகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 16 ஆண்டு காலமாக இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்காகவே அதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று அறிவித்த பின்னரும் ஏன் பாதுகாப்பிற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என அரசிடம் பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
பாதுகாப்பை பலப்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டே தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. பாதுகாப்பிற்காக அதிக நிதி ஒதுக்கியிருந்தும் பாதுகாப்பு சார்ந்த இயந்திரங்களை அவர்களால் சரியாக கட்டமைக்க முடியவில்லை என்பது ஊழலையே எடுத்துக்காட்டுகின்றது.
ஊழலை விரட்டுவோம் என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராணுவத்தின் மீதுள்ள ஊழல்களை கண்டுபிடிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க……
https://www.youtube.com/embed/W6P53Gvz58w
