பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையில் அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் தீவிர பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் நெருக்கடிகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை வழங்காத காரணத்தினால், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
புதிதாக 50 பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை குறித்தும் அவர் இங்கு கருத்து தெரிவித்தார்.
கல்வியை விரிவுபடுத்துவது ஒரு நேர்மறையான விடயம் என்ற போதிலும், தற்போதுள்ள 17 அரசு பல்கலைக்கழகங்களைக் கூட சீராகப் பராமரிக்க முடியாத சூழலில், புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தற்போதைய பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பாதுகாப்பதற்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், அரசாங்கத்தின் மௌனப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சாருதத்த இலங்கசிங்க மேலும் குறிப்பிட்டார்.
Source: https://tamilwin.com/article/futa-strike-on-today-1788922960
