முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் உதய கம்மன்பில சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இன்று (17) இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைச் சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு உதய கம்மன்பில இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
எனினும், உதய கம்மன்பிலவைக் கைது செய்வதற்கு தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமீபத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.
அத்துடன் விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னிலையான பிரதி மன்றாடியார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
