தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் நோக்கில்
வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளக் கைவாங்காமல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாதென இலங்கைத்
தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான
எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இல்லத்தில் நடைபெற்ற குறித்த
வர்த்தமானி மூலமான காணி அபகரிப்புத் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும், அதை
எதிர்கொள்வதற்கான சட்டஆலோசனைகள் தொடர்பிலும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான
சட்டத்தரணிகள் குழுவினரால் மக்களுக்கு தெளிவூட்டப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சிசெய்துவந்த நிலங்களை ஒரு
நொடியில் அரசநிலங்களாக மாற்றுவதற்குரிய செயற்பாடே இந்த வர்த்தமானி
அறிவித்தலாகும்.
தமிழ் மக்களின் காணிகள்
இவ்வாறு குறித்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆக்கிரமிப்பதற்காக நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்ட இடங்களில் காணிகள் உள்ள தமிழ் மக்கள் உடனடியாக தமதுகாணிகளை
உரிமை கோரவேண்டும்.
குறித்த பகுதிகளில் காணிகள் உள்ளவர்கள் புலம்பெயர்ந்திருப்பின் உடனடியாக
வெளிநாடுகளிலிருந்து வருகைதந்து அக்காணிகளை உரிமைகோரவேண்டும்.
வெளிநாடுகளில்
இருந்து வருகை தருவது கடினமாக இருப்பின், உடனடியாக அந்த காணி உரிமையை இங்குள்ள
உறவினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அரசகாணியாக்குவதை ஒருபோதும்
அனுமதிக்கமுடியாது.
அபகரிக்கும் முயற்சி
அதற்கு தமிழ் இங்குள்ள தமிழ் மக்களும் அனுமதிக்கக்கூடாது.
அதேவேளை பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத்
தங்கியிருக்கின்றனர். குறிப்பாக பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தியாவிலும்
அகதிகளாகத் தங்கியுள்ளனர். அவ்வாறு இங்குள்ள தமிழ் மக்கள் அகதிகளாகத்
தங்கியுள்ளனர்.
இத்தகைய சூழல்கள் இருக்கும்போது தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும்
நோக்கில் இவ்வாறு வர்தமானி அறிவித்த வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி
இந்த வர்த்தமானியை மீளக் கைவாங்குவதற்கு நீதிமன்றை நாடவுள்ளோம்.
மேலும், ஜனாதிபதி இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை
அரசகாணிகளாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவிட்டு, கடந்த முதலாம் திகதி
யாழ்ப்பாணத்திலே 40ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை
நடாத்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
