Home இலங்கை அரசியல் ஒற்றுமை மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கலாம்: சண்முகம் குகதாசன்

ஒற்றுமை மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கலாம்: சண்முகம் குகதாசன்

0

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒற்றுமை மூலமே பாதுகாக்க முடியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுன்ற முதன்மை வேட்பாளர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று(22.10.2024) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள
1985ஆம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட விவசாய மக்கள் காணிகளை மீளப்
பெறலாம்.

வன இலாகா, 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களையும் தொல்பொருள்
திணைக்களம், 2600 ஏக்கர்களையும் இலங்கை துறை முக அதிகார சபை,
5000க்கும் மேற்பட்ட ஏக்கர்களையும் மற்றும் பௌத்த பிக்குகள் விகாரைக்கான
கட்டுமானம் என்ற போர்வையில் பல நிலங்களை அபகரித்துள்ளனர்.

இதனை மீட்க தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை எனவே தான் அனைவரும் ஒன்றினைந்து ஒரே குடையின்
கீழ் செயற்படுவதுடன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெறலாம்.

ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகிவிடும்.

யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.

தமிழ் மக்களின் வாக்கு

தமிழ் வாக்குகளில் மொத்தமாக 98ஆயிரம் வாக்குகள் காணப்படுகிறது. இதில் சுமாராக
எழுபதாயிரம் வாக்குகளையாவது தமிழ் மக்கள் அளிக்க வேண்டும்.

வாக்குகளை அளிப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இஸ்லாமியர்கள் 80 வீதமான வாக்குகளை அளிக்கின்றனர். தமிழ் மக்கள் 65 வீதமான வாக்குகளையே அளிக்கின்றனர்.

எனவே இந்த முறை 85 வீதமான வாக்குகளை அளிக்க வேண்டும். அப்போது தான் நம் மண்ணின்
தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு உரிமைகள் அபிவிருத்திகளை பெற
முடியும். 

இந்தியாவில் 15 பேரை வைத்து மோடி ஆட்சி நடத்துகிறார். தெலுங்கான மக்கள் ஒற்றுமை காரணமாகவே இந்த ஆட்சி நடைபெறுகிறது.

மொத்தமாக 545 உறுப்பினர்களை வைத்து அங்கு ஆட்சி இடம் பெறுகிறது. அது போன்று இங்கு 225 உறுப்பினர்களில் நாம்
25 தமிழ் பிரதிநிதிகளை பெற வேண்டும்.

இவ்வாறாக தான் நாம் இலங்கை தமிழ் அரசு கட்சி டெலோ, புளட், ஈபிஆர்எல் எப் போன்ற கட்சிகள் ஒற்றுமையாக இணைந்துள்ளோம்.
இதனால் நம் பிரதிநிதித்துவத்தை ஒற்றுமை மூலமே பாதுகாக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version