Home இலங்கை சமூகம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடல்பான தீர்மானத்துக்கு இணக்கம்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடல்பான தீர்மானத்துக்கு இணக்கம்

0

Courtesy: Sivaa Mayuri

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள மனித உரிமைகள் பேரவையில் இன்று (09) ஒருமித்த கருத்துடன் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து வாக்கெடுப்பின்றி இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது, கருத்துரைத்த சீன தரப்பு, இலங்கையின் குறித்த தீர்மானங்களை தாம் எதிர்ப்பதால், இது ஒருமித்த கருத்தாக இருக்க முடியாது என்று கூறியுள்ளது.
எவ்வாறாயினும், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படவில்லை, அத்துடன், ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டள்ளது.

எதிர்வரும் அமர்வுகள் 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த தீர்மானமானது, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணை மற்றும் மனித உரிமைகள் பேரவையின் 51 – 1 தீர்மானத்தில் கோரியுள்ள அனைத்து பணிகளையும் ஒரு வருடத்திற்கு நீடிக்கிறது.

இதன்படி, சபையின் ஐம்பத்தெட்டாவது அமர்வில் வாய்மொழிப் புதுப்பிப்பு மற்றும் அதன் அறுபதாவது அமர்வில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முன்னேற்றம் பற்றிய விரிவான அறிக்கையை, ஊடாடும் உரையாடலில் விவாதிக்குமாறு, மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

எனினும், இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதாகவும் இலங்கை குறிப்பிட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை அமைப்பது என்பது, அதன் ஆணைக்கு புறம்பான செயல் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

எனவே, 51 – 1 தீர்மானத்தின் ஆணையை நீடிக்கக் கோரி சபையில் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version