யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 என்புத்
தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப்
புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக
அதிகரித்துள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்
புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14 ஆம் நாள் அகழ்வு இன்று
இடம்பெற்றது.
ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்
இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதற்கமைய செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித என்புத் தொகுதிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்று இடம்பெற்ற அகழ்வில் சிறுமியின் ஆடை ஒன்று உட்பட சில ஆடைகள் மற்றும்
பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுச் சான்றுப் பொருட்களாக
நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட எலும்பு எச்சங்கள்
மேலும் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள்
இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட
புதிய பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதி
“தடயவியல் அகழ்வாய்வுத்தளத்தின் இரண்டாவது பிரதேசமாக” நீதிமன்றத்தால் நேற்று
பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றில் அடையாளம் காணப்பட்ட என்பு எச்சங்கள்
துப்பரவு செய்யப்பட்டுள்ளன. அவை நாளை அகழ்ந்தெடுக்கப்பட்டு அவை தொடர்பான
எண்ணிக்கைகள் அறிக்கையிடல்கள் நாளையே வெளியிடப்படும்.
https://www.youtube.com/embed/VWijQBtBY8k
