2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக்
களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 31
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (4) உயர்
நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தேக நபர்களில், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும்
உள்ளடங்குவதாகவும், இவர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
செய்யப்படவுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.
விசாரணை
மேலும், தாக்குதல் சம்பவம் நடந்தபோது, சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறியமை
தொடர்பில் அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்
மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் நீதிமன்றத்தில்
அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகப்
போராட்டக்காரர்கள் தாக்கல் செய்த ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம
நீதியரசர் உள்ளிட்ட மூவர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அடிப்படை உரிமை
மனுவை விசாரணைக்கு எடுப்பது அநீதியை ஏற்படுத்தும் எனத் தென்னக்கோன் தரப்பு
வாதிட்டதையடுத்து, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என
உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதற்கிடையில், இந்த மனுக்களில் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த
ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சஆகியோர் மீது குற்றவியல் வழக்குகள் எதுவும்
இல்லாததால், அவர்களுக்கு எதிராக மனுக்களைத் தொடர வேண்டாம் என மனுதாரர்கள்
இணக்கம் தெரிவித்தனர்.
