Home இலங்கை அரசியல் தமிழ் சினிமா துறை குறித்து கவனம் செலுத்தவுள்ள அரசாங்கம்

தமிழ் சினிமா துறை குறித்து கவனம் செலுத்தவுள்ள அரசாங்கம்

0

இலங்கையில் தமிழ் சினிமாவை ஒரு தொழில்துறையாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று புத்தசாசனம், மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மன்றம் ஆகியவற்றிற்கான பணிப்பாளர் சபையை நியமிக்கும் நிகழ்வு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (18) நடைபெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஒரு தொழில்துறை

2004 மற்றும் 2005 காலப்பகுதியில் அனைத்து (சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்) சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாகவும், தமிழ் சினிமாவை இந்த நாட்டில் இன்னும் ஒரு தொழில்துறையாக நிலைநிறுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே, எதிர்காலத்தில் தமிழ் சினிமாவை இந்த நாட்டில் ஒரு தொழில்துறையாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.

மேலும், தேசிய திரைப்படக் கழகம் நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதோடு தனியார் துறையுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்

இலங்கை மன்றம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் இலங்கை மன்றத்தில் காணப்பட்ட பலவீனங்களை தடுத்து, தற்போதைய அதிகாரிகள் நேரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நேற்றையதினம் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அரசு கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. ப்ரின்ஸ் சேனாதீர நியமிக்கப்பட்டார்.

மேலும் கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன, எம். டி. மஹிந்தபால, டபிள்யூ. ஜி. டிதிர விக்மல், சட்டத்தரணி தக்ஷிகா திசரங்கனி பெரேரா, எம். எஸ். கே. ஜே. பண்டார, பி. என். தம்மிந்த குமார, வை. ஐ. டி. குணவர்தன ஆகியோர் சக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version