Home இலங்கை அரசியல் கம்மன்பிலவின் நாடகமே ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை..! எழுந்துள்ள கண்டனம்

கம்மன்பிலவின் நாடகமே ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை..! எழுந்துள்ள கண்டனம்

0

அரசியலில் அநாதையாக்கப்பட்ட கம்மன்பில போன்றோருக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறோம் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் (Hatton) உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (23.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஈஸ்டர் தாக்குதல் (Easter Attack) சம்பவம் இன்று அரசியல் பந்தாட்டமாக மாறியுள்ளது, அன்று முதல் நாம் இதனை பார்த்து வருகிறோம்.

நீதி கிடைப்பதற்காக பேசவில்லை

அண்மையில் வெளிவந்த கம்மன்பிலவின் (Udaya Gammanpila) நாடகமும் அதை நோக்கியே உள்ளது.

கம்மன்பிலவின் நாடகத்தை பார்க்க நாட்டு மக்கள் அரசாங்கத்தை அமைக்கவில்லை.

உதய கம்மன்பில ஒரு அரசியல் அநாதை, அவர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக பேசவில்லை. இது அவரது தேர்தல் பிரசாரமாகும்.

ஈஸ்டர் தாக்குதலைக் கொண்டு இனவாதத்தைப் பரப்பச் சென்ற ராஜபக்ச குழுவைச் சேர்ந்தவர் இவர், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களை பயமுறுத்துவதற்காக வீதியில் அலைந்து திரிந்தவர்கள் இவர்கள்.

இன, மத வாதங்களை விதைத்து கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்து பலமான அமைச்சுப் பதவியை வகித்த போது கம்மன்பில் என்ன செய்து கொண்டிருந்தார்?

அரசியல் அநாதை 

கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளை அங்கும் இங்கும் மாற்றம் செய்த போது அவர் தூங்கினாரா? அப்போது பேச முடியவில்லையா?

அரசியல் அநாதையாக்கப்பட்ட கம்மன்பில போன்றோருக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதே அரசின் பொறுப்பு.

எந்தவொரு அறிக்கையையும் மறைக்கத் தேவையில்லை, அவை மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும், மேலும் இந்த தாக்குதலால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/govt-rejects-easter-attacks-report-by-gammanpila-1729758446

NO COMMENTS

Exit mobile version