Home இலங்கை பொருளாதாரம் மத்தள விமான நிலையம் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்

மத்தள விமான நிலையம் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்

0

மத்தள சர்வதேச விமான நிலையத்தை (Mattala Rajapaksa International Airport) விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை நேற்று (10) ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்தள விமான நிலையத்தை விமானங்களை கொண்டு வரக்கூடிய அளவுக்கு கட்டமைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.

வேறு தொழில்களுக்கு முன்மொழிவு

ஓரிரு வருடங்களில் அதை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.

ஆனால் இந்த விமான நிலையம் எங்களிடம் இருப்பதால், எங்களுக்கு நிறைய செலவுகள் மற்றும் கடன் உள்ளது.

மேலும், இலங்கைக்கு ஒரு மாற்று விமான நிலையம் தேவை. இது எங்களுக்கு கூடுதல் நன்மையாக உள்ளது.

நாங்கள் தற்போது விமானங்களை கொண்டு வர கலந்துரையாடி வருகின்றோம். இது ஒரு பெரிய விடயம்.

இதற்காக சரியான முதலீட்டாளர்களை நாம் கொண்டு வர வேண்டும்.

அத்துடன், விமானங்களை பழுதுபார்ப்பது போன்ற தொழில்களைச் செய்ய முடியும்.

விமான நிலையத்தில் நிறைய இடம் இருப்பதால், விமான ஓடுபாதைக்கு வெளியே உள்ள பகுதிகளில் சோலார் பனல்கள் போன்ற தொழில்களுக்குச் செல்ல முன்மொழியப்பட்டுள்ளது.

பல மில்லியன் டொலர் கடன்

இது உண்மையில் வணிகத் திட்டம் இல்லாமல் கட்டப்பட்ட விமான நிலையமாகும். கடன் மலைபோல் குவிந்துள்ளது.

260 மில்லியன் டொலர் கடன் இருக்கின்றது. 2030க்குள் அதை செலுத்த வேண்டும்.

கட்டுநாயக்காவில் சம்பாதித்த பணம் இங்கு கொண்டு வரப்படுகிறது. இது பணத்தை வீணடிப்பதாகும். இது ஒரு வெறிச்சோடிய விமான நிலையம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version