Home இலங்கை அரசியல் ஆளவேண்டும் என்றால் ஐ.எம்.எப் அவசியம்: சஜித் – அனுரவுக்கு ரணில் எடுத்துரைப்பு

ஆளவேண்டும் என்றால் ஐ.எம்.எப் அவசியம்: சஜித் – அனுரவுக்கு ரணில் எடுத்துரைப்பு

0

Courtesy: குணதர்சன்

தேர்தல் பரப்புரைகள் அரங்கங்களில் எதிரொலிக்கும் காலமான இந்த தேர்தல் காலத்தில் தங்களின் எதிர்கால இலக்குகள், திட்டமிடல்கள் தொடர்பான வேட்பாளர்களின் கருத்தாடல்கள் வெளிவருகின்றன.

ஆனால் இலங்கையின் (Srilanka) பொருளாதாரத்திற்கான இலக்குகள் என்ன என்பது தொடர்பிலான வெளிப்படையான கருத்துக்களை எந்த தேர்தல் பிரசார மேடைகளும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

பெட்ரோல் விலை குறைப்பு, அரிசி விலை குறைப்பு, திருடர்களுக்கு பாடம் புகட்டுவோம், போரை வெற்றிகொண்டோம், தேசிய பாதுகாப்பு என்ற சொல்லாடல்கள் நிறைந்த பிரசாரங்கள் மாத்திரமே வெளிவருகின்றன.

பொருளாதார முன்னேற்றம்

ஆனால் மக்களின் தற்போதைய இலக்கு தேர்தல் பரப்புரைகளில் வேட்பாளர்கள் கூறும் விடயங்களா, அல்லது பொருளாதார முன்னேற்றமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

2022 ஆம் நாடு திவால் நிலை அடைந்த போது நாட்டுமக்கள் தனக்கான பங்கு இந்த நாட்டில் என்ன என்பதை அரகலய மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதற்கு பிரதான காரணம், கோட்டபயவின் ஆட்சி, உட்கட்சி மோதல், அல்லது எதிர்க்கட்சிகளின் திட்டமிடல் என பல்வேறு காரணங்கள் அடுக்கப்பட்டாலும் பிரதான காரணம் பொருளாதார சரிவு என்பதை அறிந்துள்ளோம்.

அதன் பின்னர் ராஜபக்சர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டமையும், ரணில் (Ranilwickremesinghe) ஆட்சிபீடம் ஏறியமையையும் வரலாற்றில் கண்டிருந்தோம்.

இதன் காரணமாகவே இந்த ஜனாதிபதி தேர்தல் எதிர்கால இலங்கையின் பொருளாதாரத்தை இலக்காக கொண்டமையும் என கூறப்படுகிறது.

வரிசையுகம் என கருத்துக்கூறும் சில ஆட்சியாளர்கள் அன்றைய தினம் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தனர் என்பதையும் நினைவுகொள்ள வேண்டும்.

அரகலயவின் பின்னர்

அரகலயவின் பின்னர் ரணில் ஆட்சிப்பீடம் ஏறியதோடு ஐ.எம்.எப் இன் ஆதரவு இலங்கைக்கு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் கிடைத்தது.

இதில் உலக வங்கியின் பங்களிப்பை குறிப்பிட்டாக வேண்டும். ரணில் தலைமையில் பல்வேறு பேச்சுவார்த்தைகளும் இணக்கப்பாடுகளும் இதன்மூலமாக எட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியில் இன்றைய நாட்டின் பொருளாதாரம் காணப்படுகிறது.

இதில் இலங்கை உறுதிமிக்க பொருளாதார நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டதா என்றால் அது கேள்விக்குறியான ஒன்று.

மேலும், இலங்கையில் தனிமனித வருமான சதவீதம் என்பது வீழ்ச்சிநிலையிலேயே காணப்படுவதாக அண்மைய பொருளாதார அறிக்கைகளில் வெளிவந்திருந்தன.

இதன் பின்னணியில் நாட்டிற்கு வருகைதந்த சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளையும் எவராலும் மாற்றமுடியாது என ரணில் விக்ரமசிங்க நேற்று சூளுரைத்திருந்தார்.

அவ்வாறு சஜித் தரப்போ, அனுர (Anura kumara Dissanayake) தரப்போ மாற்றங்களை கொண்டுவந்து நாட்டை முன்னேற்றமடைய செய்யமுடியுமானால் அதற்கான அறிக்கைகளை சமர்ப்பியுங்கள் எனவும் சவால் விடுத்திருந்தார்.

எனினும் நேற்று ரணில் விடுத்த சவாலுக்கு அனுரவோ சஜித்தோ (Sajith Premadasa) இதுவரையில் எந்தவிதமான பதில்களையும் வழங்கவில்லை.

சர்வதேச நாணய நிதியம்

நேற்றைய ரணிலின் பிரசார கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது, “சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதன் ஊடாக, மேடைகளில் அவர்கள் சொல்லும் விடயங்களில் உள்ள உண்மைத் தன்மையை மக்களால் கண்டு கொள்ள முடியும்.

பொருட்களின் விலைகளையும் வரிகளையும் குறைக்க தானும் விரும்புகின்றேன். எனினும், ரூபாயை பலப்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே தன்னால் அதனைச் செய்ய முடியும்.

அதனைத் தவிர வேறு மாற்றுவழி இருந்தால் உடனடியாக ஐ.எம்.எப் உடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதனை சமர்ப்பித்து கருத்தரிந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாஸவிடமும் அனுர குமார திசாநாயக்கவிடமும் சவால் விடுகின்றேன்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version