Home இலங்கை அரசியல் சிங்கள பேரினவாதிகளுக்கு எடு பிடிகளாக அநுர அரசாங்கம்! எதிரொலிக்கும் குற்றச்சாட்டு

சிங்கள பேரினவாதிகளுக்கு எடு பிடிகளாக அநுர அரசாங்கம்! எதிரொலிக்கும் குற்றச்சாட்டு

0

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை டச்பே கரையோரப் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் நேற்று (17) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடலோரப் பிரதேசங்களில் இடம் பெற்ற கட்டுமானங்களை அகற்றக்கோரிய இடத்தில் தற்போது அடுத்த கட்டமாக பிக்குமாரால் அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்டனர் அதனடிப்படையில் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் பல அழுத்தங்களை கொடுத்து பிறகு இரவு பாதுகாப்பு படையினரால் அகற்றப்பட்டது.

ஆனந்த விஜேபாலவின் கூற்று 

இப்போது மாற்றீடான அழுத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியதாவது புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதியே அகற்றப்பட்டது மீண்டும் அதே இடத்தில் சிலையை வைப்போம் என்று.

புத்தர் சிலை வைப்பது திருகோணமலைக்கு புதிதான விடயமல்ல எத்தனை ஆயிரம் புத்தர்கள் வைத்து ஆயிரக்கணக்கான மக்களையும் கொன்று புதைத்து அடாத்தாக இடங்களை பிடிக்கும் செயலாகவே நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம்.

இப்போதும் புதிய அரசாங்கம் எமக்கு தீர்வு தரப்போகின்ற அரசாங்கம் அல்லது மிகப் பெரும்பான்மையுடன் இனவழிப்புகளுக்கு எதிரான அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற அநுர அரசாங்கம் கூட மகாநாயக்க தேரர்களினதும் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகளினதும் எடுபிடிகளாகவே இருக்கின்றனர் என்பதை தற்போதைய நிகழ்வுகள் காட்டுகிறது. 

ஆகவே எந்த தமிழர்களுமே இந்த சிங்கள அரசாங்கங்களை நம்புவதற்கு தயாராகவில்லை. முதலில் வலியுறுத்தியது போல எந்த மக்கள் அல்லது எந்த ஊடகங்கள் ,வெளிநாட்டு அமைப்புக்கள் சிங்கள டயஸ்போராக்கள் கோட்டபய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஆக்கினார்களோ அதே அவர்கள் ஜே.வி.பி எனும் அரசாங்கத்தை அதே முகத்துடன் தேசிய மக்கள் சக்தியை நாட்டின் ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை

அரசாங்கள் மாறுகின்றன கட்சிகள் மாறுகின்றன ஆனால் காட்சிகள் மட்டும் தமிழர்களுக்கு எதிராகவும் அல்லது தமிழ் தேசியத்துக்கு எதிராகவும் தமிழின மக்களுக்கு நியாயம் கொடுக்க முடியாத அரசாங்கமாக இன்று வரைக்கும் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த சம்பவம் மன அழுத்தங்களை மட்டுமல்ல தமிழ் மக்களிடையே அவலத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது .யுத்தத்தால் அழிந்து காயப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களை மேலும் காயப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இது தான் உண்மையாகவும் வரலாற்று தொடர் கதையாகவும் உள்ளது. 

இன்று மட்டுமல்ல இனியும் இது தான் நடக்கப்போகின்றது. தமிழ் மக்களாகிய நாங்கள் வலி சுமந்து தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள் இருக்கின்றோம். 

எந்த அரசாங்கத்தையும் நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை. அநுர தோழர்கள் என தமிழ் மக்கள் கூட போனார்கள் அவர்கள் கூட வெட்கப்பட்டு வேதனைபடக் கூடிய நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது இந்த சம்பவம் எனவும் மேலும் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version